தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, பின்னர் அதை ‘டெலிட்’ செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்தப் பெண் காவலர் தூத்துக்குடி மாவட்ட ‘சிங்கப்பெண் சிறப்புப்படைக்கு’ பணி மாறுதல் பெற்ற போதிலும், அவரை விடுவிக்காமல் ஆய்வாளர் திலீபன் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர், இந்த விவகாரத்தைத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த மே 6-ஆம் தேதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற பெண் காவலரின் கணவர், இதுகுறித்து ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, காவல் நிலையத்தின் முன்பாகவே ஒருவரையொருவர் சரமாரியாக மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இந்த மோதலின் போது, ஆத்திரமடைந்த ஆய்வாளர் திலீபன், பெண் காவலரின் கணவரைத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, ஆய்வாளர் திலீபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “என் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை; காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களை என் பிள்ளைகளாகவே கருதுகிறேன். வேலை செய்யாதபோது சற்று கடுமையாகப் பேசியிருக்கலாமே தவிர, பாலியல் தொந்தரவு தரவில்லை, விசாரணைக்கு எனது செல்போனை ஒப்படைக்கத் தயார்” எனத் தனது தரப்பு நியாயத்தைக் கூறினார். எனினும், இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்த நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
