ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியில் உள்ள லர்னியா உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த 30 வயதான டெய்லா பிரெய்லி என்ற ஆசிரியை, தனது அதிகார வரம்பிற்குள் இருக்கும் குழந்தையைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் விசாரணையில், கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் சமூக வலைத்தளமான ஸ்னாப்சாட் (Snapchat) மூலம் அந்த மாணவருடன் ஆசிரியைக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவர் தனது நிர்வாணப் படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை அந்த மாணவனுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அந்த மாணவனைத் தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் ரீதியாகத் தூண்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், பள்ளியில் பணியில் இருந்த ஒரு நாளில் கிடைத்த இடைவேளையைப் பயன்படுத்தி, மாணவனை வெளியே வரவழைத்துத் தனது காரின் பின்புறத்தில் உடலுறவு கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவர் மறுநாள் காலையில் உட்கொள்ளும் அவசரக் கருத்தடை மாத்திரையை (Morning-after pill) வாங்கியுள்ளதும், இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டாம் என மாணவனை மிரட்டியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தங்களைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியைக்கு ஆபாசப் படங்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டதாக அம்மாணவன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
பள்ளி வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் தன்னை நாடி வந்தபோது, தான் செய்த தவறுகளுக்காகவும், தனது குடும்பம், கணவர் மற்றும் ஆசிரியர் பணி பறிபோய்விடுமே என்ற பயத்திலும் அந்த ஆசிரியை மனமுடைந்து அழுததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவன் மட்டுமின்றி, மேலும் இரண்டு மாணவர்களுடனும் அவர் சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது
