தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.
முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். என் எஸ் கே மற்றொரு நல்ல குணம் அவரின் ஈகைதான். தமிழ் சினிமாவில் வள்ளல் என்று பெயர் பெற்ற எம் ஜி ஆருக்கு முன்னோடியாக இருந்தவர் என் எஸ் கே. தான் நடித்து சம்பாதித்த செல்வம் முழுவதையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவிட்டுள்ளார். தனது வாரிசுகளுக்குக் கூட எந்த சொத்தையும் அவர் சேர்த்துவைக்கவில்லை.
பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை திரைப்படங்களில் பேசுவதோடு நின்றுவிடாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் அதை பின்பற்றியவர்தான் என் எஸ் கிருஷ்ணன். அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
அறிஞர் அண்ணா கதைவசனம் எழுதிய நல்லதம்பி படத்தில் என் எஸ் கே கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பானுமதி. பானுமதி மிகவும் தன்னம்பிக்கை உள்ள பெண்மணி. யாரிடமும் எதற்காகவும் பணிந்துபோகும் தன்மை கொண்டவர் இல்லை. சுயமரியாதை உள்ள பெண்மணி.
அவர் ஒருநாள் என் எஸ் கே முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அதைப் பார்த்த ஒருநபர் கிருஷ்ணனிடம் சென்று “அங்க பாருங்க உங்க முன்னாடியே எப்படி திமிரா அந்தம்மா கால் மேல் கால் போட்டு உக்காந்துருக்குன்னு” என வத்திவச்சுள்ளார். அதைக் கேட்டு கடுப்பான என் எஸ் கே “யோவ் அந்தம்மா உன் கால் மேலயா கால் போட்டிருக்கு. அது கால் மேலதான போட்டுருக்கு. போய் வேலைய பாருய்யா” என திட்டி அனுப்பினாராம். 70 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஆண், பெண் குறித்து இவ்வளவு தெளிவான சிந்தனையோடு இருந்தது வியப்புக்குரியதுதான்.
