இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக ‘இண்டிகோ லைட்’ என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 7 கிலோ வரை எடை கொண்ட ஒரு கேபின் பேக்கேஜ் மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்படும். தங்களுக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் பயணிகள் பணம் செலுத்தினால் போதும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 1-ம் தேதி முதல் இண்டிகோவின் இணையதளம் மற்றும் செயலியில் தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் 2026 ஜூலை 15-ம் தேதி முதல் இந்தத் திட்டத்தின் கீழ் பயணம் செய்யலாம்.
இந்த வசதி இண்டிகோவின் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நான்-ஸ்டாப் விமான சேவைகளுக்கும் பொருந்தும். ஒருமுறை பயணம், சுற்றுப் பயணம், பல நகரங்களுக்கான பயணம் என அனைத்து விதமான புக்கிங்குகளுக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமே இந்த சலுகை உண்டு. இக்கட்டணத்தில் பயணிப்பவர்களுக்கு இருக்கை தானாகவே இலவசமாக ஒதுக்கப்படும். அதே சமயம், செக்-இன் பேக்கேஜ், விருப்பமான இருக்கை, உணவு அல்லது ‘ஃபாஸ்ட் ஃபார்வர்டு’ போன்ற கூடுதல் சேவைகள் தேவைப்பட்டால், அதற்குத் தனியாகப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
‘இண்டிகோ லைட்’ கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கும் பயணிகள், இண்டிகோவின் ‘ப்ளூசிப்’ லாயல்டி திட்டத்தின் கீழ் புள்ளிகளைப் பெறவும் பயன்படுத்தவும் முடியும். இருப்பினும், கைக்குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், கார்ப்பரேட் மற்றும் குழுவாக புக்கிங் செய்பவர்களுக்கு இந்த ‘இண்டிகோ லைட்’ கட்டண முறை பொருந்தாது என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பயணிகள் பயன்படுத்தும் சேவைகளுக்கு மட்டும் பணம் செலுத்தி, குறைந்த செலவில் வசதியாகப் பயணிப்பதற்கான தொடர் முயற்சியே இது என்று இண்டிகோவின் தலைமை வியூக அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.
