அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வழங்கிய ஆதரவு கடிதங்கள் குறித்து கிண்டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தவெக சமர்ப்பித்த அந்த ஆதரவு கடிதங்கள் போலியானவை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்திருந்தார். அத்துடன், காவல்துறையிலும் அவர் இது தொடர்பாகப் புகார் மனுவை அளித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது புகாரில், அமமுக எம்.எல்.ஏ யாரும் அத்தகைய ஆதரவு கடிதத்தை வழங்கவில்லை என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார்களின் தொடர்ச்சியாகவே தற்போது காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. விஜய்யின் கட்சிக்கு ஆதரவு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமமுக எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
