இது என்னடா புதுசா இருக்கு… கல்யாணம் ஆகாவிட்டால் அனுமதி இல்லை… பூங்காவில் வைக்கப்பட்ட பரபரப்பு பேனர்…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலகட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறும் செயல்களில் உள்ளது. இதற்காக கடற்கரை மற்றும் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் அதற்கு எந்த பலனும் இல்லை. இதனிடையே ஓசூரில் பூங்கா முன்பு விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பாக குழந்தைகள் பூங்கா ஒன்று அமைந்துள்ளது.

இங்கு நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரி கரையை ஒட்டி அமருவதற்கான இருக்கைகள் உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து மகிழ்கின்றனர். இந்நிலையில் பூங்காவில் பகல் நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். மறுபக்கம் காதல் ஜோடிகள் அத்துமீறல் சம்பவமும் நடைபெறுகிறது. இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

   

இந்நிலையில் பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவுக்குள் அனுமதி இல்லை என்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை மற்றும் காவல் உதவி எண் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தன. குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பேனரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

   

இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான காரணத்தால் உடனே பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறையை வைக்கவில்லை என்று தெரிவித்த நிலையில் யார் வைத்தது என்ற விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.