தமிழகத்தில் திருமணங்களின் போது மணமகள் வீட்டார் மணமகனுக்கு அல்லது அவரது குடும்பத்திற்கு ரொக்கம், நகைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களைக் கொடுக்கும் ‘வரதட்சணை’ முறை சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், சமூகத்தில் அது இன்றும் ‘திருமண தங்கம்’ மற்றும் ‘சீர்வரிசை’ என்ற பெயர்களில் மறைமுகமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இரு நண்பர்கள் மகள் திருமணத்தை பற்றி பேசிய உரையாடல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “என்னப்பா! பத்திரிகை எல்லாம் வைத்தாச்சு… இந்த விலைவாசி விக்கிற விக்கில பொண்ணுக்கு எவ்வளவு நகை போடப்போற?” என்று நண்பர் ஒருவர் எதார்த்தமாகக் கேட்ட கேள்விக்கு, “ஒரு பவுன் நகைகூட இல்லை; அதற்கு பதிலாக எங்கள் பூர்வீக ஊரில் இருக்கும் 2 சென்ட் இடத்தை மகள் பெயரில் எழுதி கொடுக்கப் போகிறேன்” என ஒரு தந்தை சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் இன்றைய சூழலில், தமிழகத்தின் பல நடுத்தரக் குடும்பங்களில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் புதிய எதார்த்தத்தின் வெளிப்பாடுதான் இந்த உரையாடல். பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காகத் தங்க நகைகளைச் சேர்த்து வைப்பதற்குப் பதிலாக, தங்களிடம் இருக்கும் நிலம், வீடு, காலி மனை போன்ற சொத்துகளை மகள்களின் பெயரில் எழுதிக் கொடுக்கும் ஒரு புதிய கலாச்சாரம் இன்று தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உலகத் தங்கக் கவுன்சிலின் புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே அதிக தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளதோடு, நாட்டின் மொத்த தங்க நுகர்வில் சுமார் 40 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களிலேயே நடைபெறுகிறது. அதிலும், அதிக தங்கம் வாங்கப்படும் மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் சூழலில், ஆண்டுதோறும் விற்பனையாகும் 150 முதல் 200 டன் தங்கத்தில் 70 முதல் 80 சதவீதம் திருமணங்களுக்காகவே வாங்கப்படுகிறது. பொதுவாகப் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மகளின் திருமணத்திற்காக வங்கி, தபால் நிலையம் போன்றவற்றில் சிறுகச் சிறுகச் சேமிப்பது வழக்கம். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் 50 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் 10 பவுன் வாங்கக்கூடிய 5 லட்சம் ரூபாய் சேமிப்பைக் கொண்டு, இன்று வரலாறு காணாத விலை உயர்வால் 4 பவுன் நகையைக்கூட முழுமையாக வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலால், திருமண மேடையில் தங்கம் ஜொலிப்பதை விட, மகளின் பெயரில் இருக்கும் நிலப் பத்திரமோ அல்லது வீட்டுச் சொத்தோ அவளது எதிர்காலத்திற்கு அதிக பாதுகாப்பையும் பொருளாதார சுதந்திரத்தையும் வழங்கும் என்ற எண்ணம் பெற்றோர்களிடையே தற்போது வலுப்பெற்று வருகிறது. நகை என்பது காலப்போக்கில் கரையக்கூடிய சொத்தாகப் பார்க்கப்படும் நிலையில், நிலம் என்பது தலைமுறைகளைத் தாண்டி மதிப்பு உயரக்கூடிய சொத்து என்ற புரிதலே பல குடும்பங்களை இந்த புதிய முடிவை நோக்கி வழிநடத்துகிறது. ஆனால், நிலம், வீடு போன்ற சொத்துகள் கைவசம் உள்ள பெற்றோர்கள் இவ்வாறு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க முடிகிறது; அதேவேளையில், எந்தவொரு சொத்தும் இல்லாமல் மாத வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் என்ன செய்வார்கள், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றால் அவர்களின் மகள்களின் திருமணக் கனவுகளுக்கு யார் பதில் சொல்வார்கள் என்ற மிக முக்கியமான கேள்வியும் இங்கே எழுகிறது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதாக வெளியான கருத்துக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாமக…
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் கூட்டணிக் கட்சிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர்…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத்…