கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய இருவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று புதுமணத் தம்பதியினர் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
சிரா தாலுகாவில் உள்ள துவாராலு பாலம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பின்னாலிருந்து அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் மீது பலமாக மோதி விட்டு நிறுத்தாமல் தப்பியோடியது. இந்த கொடூர விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு கணவன் தர்ஷன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய மனைவி உஷாராணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாகப் பலியானார்.
திருமணமான சில நாட்களிலேயே புதுமணத் தம்பதி இருவரின் உயிரையும் பறித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தவாரேகெரே போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வாகனத்தையும் டிரைவரையும் பிடிக்கச் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
