உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன் தனது வயதான பாட்டி மற்றும் அத்தையை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் அந்த வாலிபனின் ஆடம்பர ஆசைக்காகக் குடும்பத்தினர் கடன்பட்டு ஒரு புதிய பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ஆனால், அதோடு நிறுத்தாமல் தற்போது தனக்குப் புதிய ‘ஐபோன்’ மற்றும் கைச்செலவுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் உடனடியாக வேண்டும் எனக் கூறி குடும்பத்தினரிடம் சண்டை போட்டுள்ளான். அவர்கள் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபன் தனது வயதான பாட்டியையும் அத்தையையும் இரக்கமின்றி மிருகத்தனமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்துள்ளான்.
பாதிக்கப்பட்ட வயதான பாட்டி கண்ணீர் மல்கத் தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்து நீதி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கண்டு கொந்தளித்த நெட்டிசன்கள் அந்த வாலிபன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் புலந்த்ஷஹர் போலிஸார் உடனடியாக வழக்கைப் பதிவு செய்து, அந்தப் பேரனைக் கைது செய்ய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
