பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பி வரும் ஆதவ் அர்ஜுனாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களின் பேரன்பிற்குப் பாத்திரமானவர் என்றும், அவர் மீது தேவையற்ற மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதை ரஜினி ரசிகர்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா உடனடியாக ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக இது போன்ற மலிவான விமர்சனங்களை முன்வைப்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் போன்ற ஒரு மூத்த கலைஞர் குறித்து இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும், இது போன்ற செயல்கள் அரசியல் நாகரிகத்திற்கு அழகல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
