கணவன் ஜெயிலில்… கள்ளக்காதலன் பேச்சைக் கேட்டு பெற்ற 2 மகன்களையும் கிணற்றில் தள்ளிய தாய்… வாணியம்பாடியை உலுக்கிய கொடூரம்….!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம், பெத்தூர் பகுதியில் விவசாயக் கிணற்றில் இரு சிறுவர்களின் சடலங்கள் மிதப்பதாகக் கடந்த மாதம் 30-ஆம் தேதி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்காயம் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும், அழுகிய நிலையில் இருந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த குழந்தைகள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த ஆறு நாட்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், உயிரிழந்த சிறுவர்கள் ஜமுனாமத்தூர் வெளிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு – சிவகாமி தம்பதியினரின் மகன்களான பிரதாப் (5) மற்றும் பிரேம்குமார் (2) என்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, பெற்ற தாயே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, தாய் சிவகாமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

   

கணவர் சேட்டு செம்மரக் கடத்தல் வழக்கில் சிறையில் இருப்பதால், சிவகாமி அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுடன் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால் சிவகாமி மீண்டும் கர்ப்பமானார். “நமக்குத் தான் குழந்தை பிறக்கப் போகிறதே, ஏற்கனவே உள்ள இரண்டு மகன்கள் எதற்கு?” என்று ராஜா கேட்க, இருவருமாகச் சேர்ந்து அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.

   

திட்டமிட்டபடி, சம்பவத்தன்று இரு குழந்தைகளையும் ஆலங்காயம் பகுதிக்கு அழைத்து வந்த சிவகாமியும் ராஜாவும், ஆள் நடமாட்டம் இல்லாத விவசாயக் கிணற்றில் குழந்தைகளை அடுத்தடுத்துத் தள்ளிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். தற்போது இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்காதலுக்காகப் பெற்ற தாயே இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.