மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உயிரிழந்த மகனின் அரசு வேலை மற்றும் பணத்துக்காக மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்த 60 வயதான லதாபாய் கங்குர்டே என்பவர் தன்னுடைய மருமகள் ரூபாலியை(35) இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார் . லதாபாயின் மகன் விலாஸ் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.
அவருடைய மறைவுக்கு பின்னர் கிராஜுவிட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய் மனைவிக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கருணை அடிப்படையில் வழங்கப்படும் ரயில்வே வேலைக்காக ரூபாலி விண்ணப்பித்திருந்தார். இதனிடையே லதாபாய் தனது 15 வயது பேரனுக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். மருமகளுக்கு கிடைத்த பணத்தை மாமியார் கேட்ட நிலையில் மருமகள் மறுத்ததால் ஆத்திரமடைந்த லதாபாய் தனது நண்பர் ஜெகதீஷ் (67) என்பவருடன் சேர்ந்து மருமகளை கொலை செய்ய திட்டமிட்டார்.
இருவரும் சேர்ந்து கடந்த புத்தாண்டு தினத்தில் இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசி விட்டனர். அதன் பிறகு எதுவும் தெரியாதது போல மருமகளை காணவில்லை என போலீசீர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் லதா பாய் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது அவரையும் அவருடைய நண்பரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
