பீகார் மாநிலத்தின் ஷாபூர் படோரி ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மூன்று பெண்களும் இரண்டு சிறு குழந்தைகளும் குறுக்கு வழியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் ஒரு ரயில் அந்தத் தண்டவாளத்தில் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் நெருங்குவதைக் கண்ட அவர்கள், தப்பித்து ஓட வழியில்லாமல் தண்டவாளத்தின் நடுவிலேயே மாட்டிக்கொண்டனர்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அங்கிருந்த ஒரு தாய் தனது உயிரைப் பற்றிய கவலையின்றி அசாத்திய துணிச்சலுடன் ஒரு முடிவெடுத்தார். ரயில் தங்களை நெருங்குவதற்குள், தனது இரண்டு குழந்தைகளையும் தண்டவாளத்தின் நடுவே தரையில் படுக்க வைத்து, அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தனது உடலால் அவர்களைக் கவசமாக மூடிப் பிடித்துக் கொண்டார். அவருடன் இருந்த மற்ற இரு பெண்களும் உடனடியாகப் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர். அடுத்த சில நொடிகளில் அதிவேக ரயில் அவர்கள் மீது கடந்து சென்றது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோவில், ரயில் வேகமாகச் சென்றாலும் அந்தத் தாய் தன் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி அசையாமல் படுத்திருப்பது பார்ப்பவர்களை உரைய வைக்கிறது. ரயில் முழுமையாகக் கடந்த பிறகு, அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக ஓடிவந்து அவர்களை மீட்டனர். அந்தத் தாயின் சமயோசித புத்தி மற்றும் எல்லையற்ற பாசத்தின் காரணமாக, ரயிலுக்கு அடியில் சிக்கியும் அனைவரும் காயங்களின்றி அற்புதமாக உயிர் தப்பினர். இந்த வீடியோவைக் காணும் நெட்டிசன்கள், “தாயின் பாசத்திற்கு முன்னால் மரணமும் தோற்றுவிடும்” என்று அந்தப் பெண்ணின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
