வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், இருசக்கர வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சியூட்டும் மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரசவ வலி அதிகரித்து, மருத்துவமனையை அடையும் முன்பே இந்த பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே அப் பெண்ணிற்குத் திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தை நெருங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, மோட்டார் சைக்கிளிலேயே குழந்தை பிறந்தது. இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் உடனடியாக ஓடிவந்து தாய்க்கும் சேய்க்கும் முதலுதவி அளித்து, அவர்களைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர்.
இந்த அரிதான தருணம் வீடியோவாகப் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “அந்தத் தாய் உண்மையிலேயே மிகவும் தைரியமானவர்” எனப் பலரும் இணையத்தில் வியந்து பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
