தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டே மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் தக்க வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அதேசமயம் மற்றொரு பக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதேசமயம் சமீபத்தில் அதிமுகவிலிருந்து மூத்த நிர்வாகி செங்கோட்டையன் நீக்கப்பட்டது மேலும் பரபரப்பு கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் தலைமையில் நேற்று அதிமுகவில் இணைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் கூறுகையில், செங்கோட்டையன் கட்சிப் பொறுப்பில் இருந்தவரை தங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இதனால்தான் ஓபிஎஸ் தலைமையை ஏற்றி சென்றோம். தற்போது அதிமுக பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
