திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் ஏரி தூர்வாரும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், மது போதையில் அந்தப் பகுதிக்கு வந்துள்ளார். வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் தேவையின்றி வம்பு இழுத்து, ஆபாசமான வார்த்தைகளால் பேசி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்த பெண்கள் அவரின் செயலைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென பெண்கள் மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடி உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் பெண்கள் அனைவரும் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெண்களை அச்சுறுத்தி, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற அந்தப் போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
