தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம். ஆர். பல்லவி. தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது இவர் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்தார் என்பதும், தீவிரப் பிரச்சாரத்தின் இடையே உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குழந்தை பிறந்து சில நாட்களே ஆன நிலையில், சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழா ஒன்றில் சென்னை மேயர் பிரியா மற்றும் தவெக எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு நடைபெற்ற குத்துவிளக்கேற்றும் நிகழ்வில், மேயர் பிரியா தன்னை குத்துவிளக்கேற்ற விடாமல் தடுத்து அவமதித்ததாகக் கூறி பல்லவி கோபத்துடன் வெளியேறினார். இந்த அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதியான தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சர்ச்சை குறித்துப் பேசிய எம்.எல்.ஏ பல்லவி, தனக்குக் குழந்தை பிறந்து இன்னும் சில நாட்களே ஆவதாகவும், மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையிலும் தொகுதி மக்களின் நலனுக்காகவும், அரசு விழாவிற்கு மதிப்பளித்தும் தான் அங்கு வந்ததாகக் குறிப்பிட்டார். அவ்வாறு மருத்துவர்களின் அறிவுரையை மீறி, குழந்தை பிறந்த வெறும் 10 நாட்களிலேயே தம்மைக் காட்டிலும் அரசுப் பணியே முக்கியம் என வந்த தன்னை, அங்குள்ளவர்கள் வேண்டுமென்றே தடுத்து அநாகரிகமாக அவமதித்துவிட்டனர் எனத் தனது ஆதங்கத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
