சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ பல்லவி ஆகியோருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. விழாவின் தொடக்கத்தில் ரிப்பன் வெட்டுவதில் இருவருக்குள்ளும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் இருவரும் ஆளுக்கொரு கத்திரிக்கோலை வைத்துக் கொண்டு ரிப்பனை வெட்டினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில், மேயருக்கு அடுத்ததாக விளக்கேற்ற எம்.எல்.ஏ பல்லவி கையை நீட்டியபோது, மேயர் பிரியா அவருக்கு மெழுகுவர்த்தியைக் கொடுக்காமல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். பின்னர் மற்றொரு பள்ளிக் கட்டிட நிகழ்வில் மேயர் மெழுகுவர்த்தியை நீட்டியபோது, சுயமரியாதை காரணமாக எம்.எல்.ஏ பல்லவி அதை வாங்க மறுத்துப் பின்வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள மேயர் பிரியா, அரசு நெறிமுறைப்படியே (புரோட்டோகால்) குத்துவிளக்கு ஏற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசு விதிகளின்படி முதலில் ஐஏஎஸ் அதிகாரிகளும், அதன் பிறகுதான் எம்.எல்.ஏவும் விளக்கேற்ற வேண்டும் என்றும், ஆனால் அதற்குள்ளாகவே எம்.எல்.ஏ கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜயை மேயர் பிரியா இதுவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்காத ஒரு பின்னணியும் இந்த நிகழ்வோடு ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வருகிறது.
மறுபுறம், பள்ளி கட்டிடத் திறப்பு விழாவின் போது குத்துவிளக்கேற்ற விடாமல் தன்னை மேயர் பிரியா திட்டமிட்டே தடுத்து அவமதித்ததாக தவெக எம்.எல்.ஏ பல்லவி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தான் இந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், கடைசி நேரத்தில் திட்டமிட்டே மேயர் பிரியா அங்கு வருகை தந்து தனக்குரிய மரியாதையைக் குறைக்க முயன்றதாக பல்லவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசு விழாவில் மேயர் மற்றும் தவெக எம்.எல்.ஏ இடையே அரங்கேறிய இந்த மோதல் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
