நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை தவெக எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின் போது தவெக தலைவர் விஜய், திமுகவையும் அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்து வந்த போதிலும், தற்போது நிலவும் சிக்கலான அரசியல் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டி வரும் கண்ணியமான அணுகுமுறை அரசியல் நோக்கர்களை வியக்க வைத்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி இல்லாத சூழலைப் பயன்படுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டதும், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டியதும் “அதிகார வெறி” என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு நேர்மாறாக, மு.க.ஸ்டாலின் எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இன்றி, தவெக ஆட்சி அமைப்பதில் எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்து ஜனநாயக மாண்பைக் காத்துள்ளார்.
குறிப்பாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிபிஐ, சிபிஐஎம் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்க முன்வந்தபோது, ஸ்டாலின் அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் தரவில்லை. ஸ்டாலினின் சம்மதம் இன்றி இந்தக் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளித்திருக்க முடியாது என்பது நிதர்சனம். ஒருபுறம் ஆளுநர் மாளிகை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கத் தாமதம் செய்த நிலையில், “மக்களாட்சி தத்துவத்தின்படி புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம், ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, விஜய் ஆட்சி அமைப்பதற்கான வழியை ஸ்டாலின் முறைப்படி வலியுறுத்தினார்.
தேர்தல் களத்தில் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பதை விட, மாநிலத்தின் நலனே முக்கியம் எனச் செயல்பட்டுள்ள மு.க.ஸ்டாலினின் பிம்பம் மக்கள் மத்தியில் தற்போது உயர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிகாரத்தைக் கைப்பற்ற முனைப்பு காட்டிய நிலையில், ஸ்டாலினோ ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்ற கட்சிக்கு வழிவிட்டு மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளார். இதன் மூலம், அரசியல் முதிர்ச்சியுடனும், பெருந்தன்மையுடனும் செயல்பட்டு தமிழக மக்களின் மனங்களை வென்றுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
