விஜய் அமைச்சரவையின் 3-வது விக்கெட்?… லோதா கமிட்டி தீர்ப்பை தூக்கிய அதிமுக… சிக்கலில் ஆதவ் அர்ஜுனா… வெடித்த புதிய சர்ச்சை…!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, ஒரே நேரத்தில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) தலைவராகவும் நீடிப்பது ‘நலன் முரண்பாடு’ (Conflict of Interest) என்ற கடுமையான விவாதத்தை தமிழக அரசியலில் கிளப்பியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக, சீனியாரிட்டி அடிப்படையில் 3-வது முக்கிய இடத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா மீது அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான இன்பதுரை இந்த விவகாரத்தை முன்வைத்து மீண்டும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முன்னதாக, ஒரே நேரத்தில் இரு பதவிகளில் நீடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அப்படி எந்த விதிமுறையும் இல்லை; அதிமுகவினருக்கு விளையாட்டும் தெரியாது, அரசியலும் தெரியாது” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டியுள்ள இன்பதுரை, 2015-ல் ‘BCCI v. Cricket Association of Bihar’ வழக்கில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா குழுவின் அறிக்கையை முன்வைத்துள்ளார். அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்ற லோதா குழுவின் முதன்மைப் பரிந்துரையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

   

“விதிகள் ஏதும் இல்லை” என்று கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறியாமையைத் தீர்க்க, தமிழக அரசு அதிகாரிகள் அவருக்கு இந்தச் சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று இன்பதுரை வலியுறுத்தியுள்ளார். விளையாட்டுத் துறைக்கு அமைச்சரே தலைவராகவும், அவரே ஒரு விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகவும் இருப்பது வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்றும், இது விளையாட்டு உலகிற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

மேலும், “அதிமுகவுக்கு விளையாட்டு தெரியாது” என்ற அமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலடியாக அதிமுகவின் வரலாற்றுச் சாதனைகளையும் இன்பதுரை பட்டியலிட்டுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) 1992-ல் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதையும், 1995 SAF விளையாட்டுகளுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத அரசு வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டையும் சுட்டிக்காட்டி, “விளையாட்டு அரசியல்” செய்யும் அமைச்சருக்கு அதிகாரிகள் உண்மை நிலையைப் புரிய வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.