தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் இனி முற்றிலும் தகுதியின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 848 தனியார் பள்ளிகளுக்குப் புதிய அங்கீகாரக் கடிதங்களை வழங்கிய அவர், சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதுப்பித்தல் நிகழ்வு நடைபெறுவதைக் குறிப்பிட்டார்.
இந்தச் செயல்முறையை எளிதாக்க, ஜூலை 1 முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய பள்ளிகளுக்கான தடையில்லா சான்றிதழ் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆன்லைனில் விண்ணப்பித்து, தகுதியின் அடிப்படையில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரசியல் செல்வாக்கோ, பண பலமோ இன்றி, எவ்வித அழுத்தங்களுக்கும் இடம் தராமல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். மேலும், தமிழக மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு முரணாக இருப்பதால், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் த.வெ.க. அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
