இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் தான் எம்ஜிஆர். இப்படியான நிலையில் எம்ஜிஆர் தன்னை தாக்க வந்த திருடர்களை கலங்க வைத்த ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஒருமுறை எம்ஜிஆர் தனது வளர்ப்பு மகன் சுரேந்தருடன் சேர்ந்து கல்லக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஒரு வெள்ளி கூஜா மினுமினுத்துள்ளது.

அதனை கண்ட எம்ஜிஆர் முன்னாள் சென்ற காரிலிருந்து அது கீழே விழுந்து இருக்கலாம் அதை எடுத்து வையுங்கள் போலீஸில் ஒப்படைத்து விடலாம் என்று கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். உடனே கார் ஓட்டுநர் ராமசாமி கார் கதவை திறந்தவுடன் 12க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் காரை சூழ்ந்து கொண்டு காரில் இருந்த அனைவர்களையும் இறங்க சொல்லி கையில் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டினர். இப்போது முகத்தில் துணியை கட்டிருந்த எம்ஜிஆர் அதனை கழட்டி விட்டு கையில் கம்புடன் கீழே இறங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/MGR-1.jpg)
உடனே அந்த கொள்ளையர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு திருடன் எம்ஜிஆரை அடையாளம் கண்டுவிட்டு தலைவரே என்னை மன்னித்து விடுங்கள் ஏதோ வயிற்று பிழைப்புக்காக இப்படி செய்து விட்டோம் என்று காலில் விழுந்து கதறி உள்ளார். அதனைக் கண்டு மனம் இறங்கிய எம்ஜிஆர் ஒவ்வொரு கொள்ளையர்களுக்கும் தலா 2000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். மேலும் திருட்டை விட இழிவான தொழில் வேறு எதுவும் இல்லை இந்த பணத்தை வைத்துக்கொண்டு வேறு ஏதாவது தொழில் செய்யுங்கள் என்று எம்ஜிஆர் அரவணைப்புடன் கூற அங்கிருந்த கொள்ளையர்கள் அனைவரும் கைகூப்பி எம்ஜிஆரிடம் நன்றி தெரிவித்து சென்றுள்ளனர்.
