சதிலீலாவதியில் எம்ஜி ராமச்சந்திரன் போலீஸ் அதிகாரியாக நடித்தார். கையூட்டு பெறும் எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரம். அந்த வேடத்தை அவருக்கு வாங்கித் தந்த எம்.கந்தசாமியின் மகன் எம்.கே.ராதா சதிலீலாவதியில் நாயகனாக நடித்தார். டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் அதுதான் முதல் படம். என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதல் படம். ஆனால், அவர் இரண்டாவதாக நடித்த படம் முந்திக் கொண்டு வெளியாகி,

சதிலீலாவதியை அவரது இரண்டாவது படமாக்கியது. 1936 இல் சதிலீலாவதி வெளிவந்த போது 100 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அன்றைய உதிரி நாடக நடிகர்கள் கனவுகாண முடியாதது. அதனை எம்ஜி ராமச்சந்திரனே தனது எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். சினிமாவில் முதன்முதலில் சம்பளமாக அவர் பெற்ற முன் பணம் 100 ரூபாய் அவருக்கு அளித்த அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் படிக்கையில் 100 ரூபாயின் மதிப்பு அன்று எத்தகையதாக இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
