தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
40 களின் இறுதியில் சில புராணப் படங்களில் அவர் நடித்தார். அந்த படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் எம் ஜி ஆர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். மறுபக்கம் சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் வெளுத்து வாங்கும் சகலகலா வல்லவனாக வலம் வந்தார்.
இன்னொரு பக்கம் ஜெமினி கணேசன் காதல் படங்களாக நடித்து பெண்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்தார். அந்த காலகட்டத்தில் எம் ஜி ஆர் வெறும் ஆக்ஷன் ஹீரோதான், அவருக்கு காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்க வராது என்ற விமர்சனங்கள் பரவ ஆரம்பித்துள்ளன. இதை எம் ஜி ஆரும் கவனித்துள்ளார்.
அதனால் அப்போது அவர் நடித்து வந்த தேவர்பிலிம்ஸ் தயாரித்த வேட்டைக்காரன் படத்தில் கதாநாயகி சாவித்ரியோடு நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அசத்தினாராம். இந்த காட்சிகளை எல்லாம் படமாக்கும்போதே படக்குழுவினர் எம் ஜி ஆர் இவ்ளோ அழகாக ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறாரே என வியந்து போய் கைதட்டி பாராட்டினார்களாம்.