தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் தான் சந்திரபாபு. இவர் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் அதிக திரைப்படங்களில் நடித்தார். பெரும் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும் இருந்தார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்கள் கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு நகைச்சுவை நடிகராக முன்னேறியவர். அவர்களுக்கு இணையான சம்பளமும் பெற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட குடும்பத்தில் பிறந்த சந்திரபாபு சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்து பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய கலைஞர் தான் சந்திரபாபு. அந்த காலகட்டத்தில் சந்திரபாபுவுக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர் கதாநாயகனாக நடித்த படம் தான் தட்டுங்கள் திறக்கப்படும். இந்த படம் படு தோல்வி அடைந்தது. இதனால் பெரும் கடன் சுமையில் தவித்தார். இதிலிருந்து நீள வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த படத்தை எடுக்க முடியாத நிலைக்கு சந்திரபாபு தள்ளப்பட்டார். கடனுக்காக அவரது வீட்டை கோர்ட் ஜப்தி செய்த நிலையில் கனவு இல்லம் கைவிட்டு போனதே என்று நிலைகுலைந்து போன சந்திரபாபு வறுமையும் போதையும் அவரை மிகப் பெரிய ஏழையாக்கியது.

இப்படி இருக்க எம்ஜிஆர் மற்றும் சந்திரபாபு இடையே மனக்கசப்பு ஏற்பட இருவரும் நீண்ட நாட்கள் பேசாமல் இருந்துள்ளனர். வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்ட சந்திரபாபு குடிக்கு அடிமையாகி இருந்த நிலையில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூட உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் சந்திரபாபு எதிர்பாராதாக எம்ஜிஆரின் மேலாளர் குஞ்சப்பன் சந்திரபாபுவின் வீட்டிற்கு சென்ற எம் ஜி ஆர் கொடுத்ததாக ஒரு வாழ்த்து மடலை கொடுத்து விட்டு சென்றார். கிறிஸ்துவரான சந்திரபாபு அதனை பிரித்துப் பார்த்தபோது அதில் ஐந்தாயிரம் ரூபாய் பணமும் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியும் இருந்தது.

அதுவரை எம்ஜிஆரிடம் பேசாமல் இருந்த சந்திரபாபு உடனே எம்ஜிஆருக்கு போன் செய்தார். மறுபக்கம் பேசிய எம்ஜிஆர் சந்திரபாபு உங்களுடைய கஷ்டத்தை நான் அறிவேன், என்னுடைய பறக்கும் பாவை படத்தில் நடிப்பதற்காக உங்களை பேசியுள்ளேன் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமும் பேசப்பட்டுள்ளது. முன்பணமாக நாளை பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு கிறிஸ்துமஸ் செய்யும் புத்தாண்டையும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்று எம்ஜிஆர் சொல்ல மறுபக்கம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக கண்கலங்கியபடி இருந்த சந்திரபாபு இறுதியாக சொன்ன வார்த்தை நன்றி ராமச்சந்திரன். இப்படி எம்ஜிஆர் பலருக்கும் பல உதவி செய்திருந்தாலும் சில நேரங்களில் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளார்.
