செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர். இவர், ஆசிரியராக பணிபுரிந்தவரும்கூட. ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவர்களுக்கு அன்பழகன், செந்தில் குமார், ஸ்ரீதேவி, உமாதேவி ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தன.
1966ஆம் ஆண்டு ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேல்மருவத்தூரில் அற்புதம் நடக்க போவதாகவும், தான் அங்கு கோயில் கொள்ளப்போவதாகவும் பங்காரு அடிகளார் வாயிலாக ஆதிபராசக்தி அம்மன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆசிரியராக இருந்த பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறுதல், வேப்பிலை மந்திரித்தல் உள்ளிட்ட போன்ற பணிகளை செய்து வந்தார்.’உலகில் உள்ள எந்த இந்து கோயில்களிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை அனுமதிப்பதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் தீட்டு என்பது ஐதீகமாக இருந்தது.
ஆனால் இந்த ஐதீகங்களை பங்காரு அடிகளார் தகர்த்தெறிந்தார்.’ ஆண்களை காட்டிலும் பெண்களின் வருகை அக்கோயிலில் நாளுக்கு நாள் அதிகரித்தது. இப்படி சக்திவாய்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் தற்பொழுது காலமானார். அவரின் மறைவு பக்தர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ,இவர் தனக்குத்தானே இரண்டு வருடங்களுக்கு முன்பே சமாதியும் கட்டி வைத்துள்ளார். அங்குதான் இவரது உடலை புதைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.