“ரேஷன் கடை ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்.. 15% சம்பள உயர்வு… ஸ்டாலின் அரசின் அதிரடி அரசாணை…!”

By Muthu Mani on பங்குனி 6, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு சுமார் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட படிகளை வழங்கி தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய மாற்றத்தின் மூலம் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் சுமார் 26,020 ஊழியர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். குறிப்பாக, புதிதாகச் சேரும் பணியாளர்களுக்கான ஓராண்டுத் தொகுப்பூதியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய ஊதிய விகிதத்தின்படி, முதல் ஓராண்டுப் பணியில் இருக்கும் விற்பனையாளர்களுக்குத் தொகுப்பூதியம் ரூ.6,250-லிருந்து ரூ.7,500 ஆகவும், கட்டுநர்களுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.6,600 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுப் பணியை முடித்தவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதில் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையிலும், கட்டுநர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.35,000 வரையிலும் புதிய ஊதியக்கற்றை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை ஊதியத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

   

சென்னை மாநகராட்சி மற்றும் இதர பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வீட்டு வாடகைப் படி மற்றும் நகர ஈட்டுப்படியில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,500-ம், கட்டுநர்களுக்கு ரூ.1,200-ம் வீட்டு வாடகைப் படியாக வழங்கப்படும். இதர பகுதிகளில் இப்பணி செய்பவர்களுக்கு முறையே ரூ.1,200 மற்றும் ரூ.1,000 வரை வழங்கப்படும். மேலும், கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை தனிப்படியும் வழங்கப்பட உள்ளது.

   

சிறப்புச் சலுகைகளாக மலைவாழ் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் வரை மலைவாழ் படியும், குளிர் காலங்களில் ரூ.400 குளிர் காலப் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.2,500 போக்குவரத்துப் படி தொடர்ந்து வழங்கப்படும். மேலும், ஒரே பதவியில் 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குத் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைகள் வழங்கப்பட்டு, தலா 3 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.