தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சசிகலா மற்றும் பாஜக இடையிலான ரகசிய பேச்சுவார்த்தைகள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. அமித்ஷா தரப்பிலிருந்து சசிகலாவிற்கு அன்பாகவும், சில நேரங்களில் மிரட்டல் தொனியிலும் அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலளித்துள்ள சசிகலா, “ஏற்கனவே சிறையைப் பார்த்துவிட்டேன், எதற்கும் அஞ்சப்போவதில்லை” எனக் கூறி, பாஜகவின் ஆரம்பக்கட்ட அழுத்தங்களுக்குப் பணியாமல் கறாரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
சசிகலாவைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக தரப்பு சில கவர்ச்சிகரமான ‘ஆஃபர்களை’ முன்வைத்துள்ளது. அதிமுகவில் முன்னால் ஓபிஎஸ் வகித்த ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இணையான அதிகாரம், தேர்தல் வேட்புமனுக்களில் கையெழுத்திடும் உரிமை மற்றும் கூட்டணியில் 10 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாஜகவை முழுமையாக நம்பி இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சசிகலா, டிடிவி தினகரனைப் போல கூட்டணியில் சேருவதா அல்லது வேட்புமனு தாக்கல் வரை அமைதி காத்து தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்துக் குழப்பத்தில் உள்ளார். மறுபுறம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய் நகர்த்தும் பாஜகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை, ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என அதிமுக சீனியர் நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர். சசிகலா எடுக்கும் முடிவைப் பொறுத்தே அவரது புதிய கட்சியின் பெயரும், அரசியல் எதிர்காலமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
