வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2026-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், பல ஆண்டுகளாக உயராமல் இருந்த இ.பி.எஸ்-95 (EPS-95) குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மாதத்திற்கு வெறும் ₹1,000 ஆக இருக்கும் இந்த பென்ஷன் தொகையை ₹5,000 முதல் ₹7,500 வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும், பி.எஃப் (EPF) பங்களிப்பிற்கான ஊதிய உச்சவரம்பை ₹15,000-லிருந்து ₹21,000 அல்லது ₹25,000 ஆக உயர்த்தவும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் நிதிச் சுதந்திரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண உயர்வு மட்டுமின்றி, மூத்த குடிமக்களின் சேவைகளை எளிதாக்க “ஈ.பி.எஃப் சுவிதா ப்ரொவைடர்கள்” என்ற புதிய திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. பாஸ்போர்ட் சேவை மையங்களைப் போலச் செயல்பட உள்ள இந்த மையங்கள் மூலம், ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பு மற்றும் கணக்கு இணைத்தல் போன்ற பணிகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் குறைந்த கட்டணத்தில் முடித்துக் கொள்ளலாம்.
அத்துடன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவப் பலன்களை விரிவுபடுத்துவது குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம். 11 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கவுள்ள இந்த மாற்றங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
