திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் மலையில் ஏறுவதற்கு வனத்துறை கடுமையான தடை விதித்துள்ளது. இந்நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் விதிகளுக்குப் புறம்பாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்குச் சென்று வந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு, மற்றவர்களையும் மலையேற்றத்திற்குத் தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார். வனத்துறையின் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி, அதனைப் பொதுவெளியில் விளம்பரப்படுத்தியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அர்ச்சனாவின் இந்தப் பதிவு பேசுபொருளானதை அடுத்து, அவர் மீது வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலையேற்றத்தின் போது இருள் சூழ்ந்ததால் தான் அச்சமடைந்ததாக அர்ச்சனா குறிப்பிட்டுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட இடத்திற்கு அவர் எப்படிச் சென்றார் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
புனிதமாகக் கருதப்படும் இம்மலையைச் சுற்றி கிரிவலம் வர மட்டுமே அனுமதி உள்ள நிலையில், அர்ச்சனாவின் இந்தச் செயல் சட்டரீதியான சிக்கல்களை உண்டாக்கியுள்ளது. வனத்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து அவர் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
