தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்களில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்து மாத்திரைகள் இல்லை என்றால் அவற்றை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதற்கு ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு தொடங்கியது. இதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள், ஜெனரிக் மருந்துகள் உள்ளிட்டவை வெளிச்சந்தையை விட 25 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம் வாடிக்கையாளர்கள் கேட்கக்கூடிய பல மருந்துகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில் முதல்வர் மருந்தகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்துகள் இல்லை என்றால், இல்லை என்று கூறி திருப்பி அனுப்பக்கூடாது எனவும் அவற்றை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜெனரிக் மருந்துகளை அதிகம் விற்க வேண்டும். முதல்வர் மருந்தகம் குறித்து ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
