விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருச்சியில் நடைபெற்ற மதசார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியின் தீர்மான பொது விளக்க கூட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்து மதத்தை எதிர்ப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியை நோக்கம் கிடையாது. ஆனால் சட்ட மேதை அம்பேத்கர் கூற்றின்படி மதசார்பின்மையை கடைப்பிடிக்காததை எப்போதும் கண்டிப்போம். மத்திய பாரதிய ஜனாத அரசு நாட்டை ஆள மதம் வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகின்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் இந்து மதத்தை வெறுப்பது அல்ல.
ஆனால் சனாதன தர்மத்தை நிச்சயமாக ஏற்காது. மதசார்பின்மையை கடைபிடிக்கும் அரசுடன் தான் தற்போது விடுதலை சிறுத்தைகள் கை கொடுத்துள்ளது. நாம் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் மதசார்பற்ற அரசு. நானும் ரவுடிதான் என்ற வாசகத்திற்கு ஏற்ப தமிழகத்தில் புதிதாக உருவானவர்கள் எல்லாம் தன்னை முதலமைச்சர் என்று கூறிக் கொள்கிறார்கள். இது 35 ஆண்டு பொது வாழ்க்கையில் அர்ப்பணித்த எனக்கு முதலமைச்சர் ஆக தகுதி இல்லையா? இவ்வாறு கூட என்னை பல திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் கொள்கையின் அடிப்படையில் உறுதியாக உள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
