சேலத்தில் மருத்துவக் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த வர்ஷினி என்ற மாணவி, தனது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் உடல் நீல நிறமாக மாறியிருந்ததாலும், அவரது அறைக் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததாலும் இது கொலையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. திருமணமான நபர் ஒருவரை வர்ஷினி காதலித்து வந்த நிலையில், அதற்கு அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று வர்ஷினியை நேரில் சந்தித்த அவரது தந்தை வரதராஜன், தற்போது தலைமறைவாக இருப்பதுடன் அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையே காதல் தொடர்பாக நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்திருக்கலாம் என்றும், ஆத்திரத்தில் தந்தை மகளைத் தலையணையால் அமுக்கிக் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள தந்தையைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
