பாமகவை சொந்தம் கொண்டாடுவதில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அன்புமணி தரப்பினர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அதிமுக மற்றும் பாமக கூட்டணி அமைந்துள்ளதாக அறிவித்தனர்.
ஏற்கனவே கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அன்புமணி தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த கூட்டணி தொடர்பாக ராமதாஸின் கருத்து என்ன என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் கூட்டணி தொடர்பான முழு அதிகாரமும் தன்னிடம் மட்டுமே உள்ளதாகவும் அன்புமணி நேற்று நடத்தியது ஒரு கூத்து எனவும், அதிமுக உடனான கூட்டணி செல்லாது எனவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கூட்டணி குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதிமுக மற்றும் பாமக கூட்டணி குறித்து தைலாபுரம் இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமதாஸ், யாருடன் கூட்டணி? அதிமுகவுடன் நாங்களும் இணைவோமா என்பதை தற்போது சொல்ல முடியாது. முக்கிய நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு பாமகவில் புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
