ஒரே படத்தில் அடுத்தடுத்த சீனில் இப்படி ஒரு மேஜிக் பண்ணிருக்காரா மயில்சாமி… இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே!

By vinoth on பங்குனி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கலக்கியவர் மயில்சாமி. பாக்யராஜ் இயகிய தாவணிக் கனவுகள் படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தோன்றி தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் மயில்சாமி.

படிப்படியாக வளர்ந்து முன்னணி நகைச்சுவை நடிகரானார். தனக்குப் பின்னால் வந்த விவேக் மற்றும் வடிவேலு ஆகியோருடன் கூட ஈகோ இல்லாமல் நடித்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவில் மயில்சாமி சேர்ந்து நடிக்காத நகைச்சுவை நடிகர்களே இல்லை என்று சொல்லலாம்.

   

சினிமா மட்டும் இல்லாமல் மயில்சாமி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். நான் அவன் இல்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் மயில்சாமிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

   

 

சிவபக்தரான மயில்சாமி சிவன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வந்த அன்றே அவரின் உயிர் பிரிந்தது. மயில்சாமியின் இறப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அவர் வாழ்ந்த பகுதி மக்களைக் கூட பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு அவர் அந்தப் பகுதி மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்திருந்தார்.

இந்நிலையில் மகன் அருமைப் பிரகாசம் மயில்சாமி பற்றி ஒரு ஆச்சர்யத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் அளித்த ஒரு நேர்காணலில் “கில்லி படத்தில் அப்பா ஒரு வேடத்தில் நடித்திருப்பார். அதே  படத்தில் பிரம்மானந்தம் நடித்தக் காட்சிகளுக்கும் அப்பாதான் டப்பிங் பேசியிருப்பார். இரண்டு காட்சிகளுமே அடுத்தடுத்து வரும். ஆனால் இரண்டுக்கும் அப்பாதான் டப்பிங் பேசினார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு இரண்டு குரல்களுக்கும் வேறு வேறு மாதிரி பேசிருப்பார்” என்று கூறியுள்ளார்.

மயில்சாமி நடிகராக மட்டும் இல்லாமல் மிமிக்ரி கலைஞராகவும் பணியாற்றியவர். அவரின் மிமிக்ரி ஷோ கேசட்கள் தமிழ்நாட்டில் வெகு பிரபலமாக இருந்தன.