மீண்டும் போர்..! டிரம்ப் பேச்சை தூக்கி எறிந்த இஸ்ரேல்.. அதிகாலையில் ஈரான் மீது பயங்கர வான் தாக்குதல்..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சை மீறி ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இரவு இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய 10 பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ஏற்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஈரானிய நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலால் ஈரானின் தலைநகர் தெஹ்ரான், கரஜ், இஸ்பஹான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கர வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அங்குள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலைய வான்வெளி உடனடியாக மூடப்பட்டு, அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாக்குதல் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். இருப்பினும் இஸ்ரேல் அந்தப் பேச்சை முற்றிலும் புறக்கணித்துவிட்டு இந்த ஆக்ரோஷமான தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. முன்னதாக லெபனானின் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கவே ஈரான் நேற்று ஏவுகணைகளை ஏவியிருந்தது. தற்போது இஸ்ரேல் நேரடியாக ஈரானுக்குள் புகுந்து பதிலடி கொடுத்துள்ளதால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வந்த தூதரகப் பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.