தமிழக அரசியலில் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் குடும்பம் தற்போது நேரடி அரசியலில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ் மார்ட்டின், நீண்ட காலம் ஐ.ஜே.கே கட்சியில் பணியாற்றிய பிறகு, சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மார்ட்டின் குடும்பத்தினர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அவர்கள் தேர்தல் களத்தில் நேரடியாகக் குதித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இணைந்த குறுகிய காலத்திலேயே லீமா ரோஸிற்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவரை அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக நியமித்து அதிரடி காட்டினார். இது கட்சிக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தினாலும், மார்ட்டின் குடும்பத்தின் செல்வாக்கு மற்றும் தேர்தல் செலவுகளைக் கவனிக்கும் திறன் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் மார்ட்டின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். தான் சார்ந்த சமூக வாக்குகளையும், கிறிஸ்துவ வாக்குகளையும் குறிவைத்து அவர் இத்தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையைப் பெற்ற வேட்பாளராக அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
லீமா ரோஸ் மட்டுமல்லாது, மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திலும், அவரது மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரி அரசியலிலும் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு திசைகளில் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், அதிமுகவில் லீமா ரோஸின் வருகை எடப்பாடி பழனிசாமிக்கு பலமாக அமையுமா அல்லது விமர்சனங்களை உருவாக்குமா என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியவரும்.
