உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தனது 12 வயது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்து, உடலை ஒரு பெட்டிக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜிஜோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவன், ஆசிரியை ஆகப் பணியாற்றும் தனது மனைவி ஊர்மிளாவின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றித் தரும்படி அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளான்.
சம்பவத்தன்று மீண்டும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட, ஊர்மிளா கணவரைக் கண்டித்துவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டில் தனியாக இருந்த மகன் மயங்கை கொடூரமான முறையில் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளான். பின்னர் கொலையை மறைப்பதற்காக சிறுவனின் உடலை ஒரு பெட்டிக்குள் திணித்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய தாய், பெட்டிக்குள் ரத்த வெள்ளத்தில் மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இது குறித்து காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜேசை போலீசார் விரைந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்து ஆசைக்காகப் பெற்ற மகனையே தந்தை கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
