உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கி, இழுத்துச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட தந்தை நிலம் மற்றும் சொத்து விவகாரம் தொடர்பாகப் பேச முயன்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த பிஎஸ்எஃப் வீரர், பெற்ற தந்தை என்றும் பாராமல் அவரை தரதரவென ரோட்டில் இழுத்துச் சென்று, இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உள்ளூர் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் ஒரு ராணுவ வீரரே, தனது வயதான தந்தையிடம் இவ்வாறு கொடூரமாக நடந்துகொண்டது சட்டப்படியும், துறை ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
