நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் அடித்துக் கொலை… காதலியைப் பார்க்க வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்….!

By Nanthini on மாசி 23, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட்டுச் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலமு மாவட்டம் முர்மா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பவன் ராம் என்பவர், அண்டை கிராமமான டெலியாகிக்குச் சென்றபோது அங்கிருந்த கிராம மக்களால் பிடிக்கப்பட்டார். ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியைத் திருட முயன்றதாகக் கூறி, அங்கிருந்தவர்கள் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பவன் ராமை மீட்ட போலீசார், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடத்திய இந்த வன்முறைச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

இருப்பினும், இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பவன் ராம் தனது காதலியைச் சந்திக்க அந்த கிராமத்திற்கு வந்திருக்கலாம் என்றும், அதைக் கண்ட கிராமத்தினர் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, திருட்டுப் பட்டம் கட்டி நாடகமாடுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றத்தை மறைக்க திருட்டுச் சம்பவத்தை கிராமத்தினர் திசைதிருப்ப முயன்றனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.