கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பகிரப்பா (28) என்பவருக்கும், ராஜேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைப் பார்ப்பதற்காக ராஜேஸ்வரி தாய் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். இதற்குப் பகிரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பகிரப்பா, வீட்டில் இருந்த கயிறால் ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து பகிரப்பாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
