உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா பகுதியில் கால்வாயில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், கை கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் அந்த பெண்ணின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் 34 வயதான பேருந்து ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்ததில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. அந்தப் பேருந்து பரோலாவை சேர்ந்த ஓட்டுநர் மோனு சிங்க் என்ற மோனோ சோலங்கி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. உயிரிழந்த பெண் பிரீத்தி யாதவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவருக்கும் அந்த பேருந்து ஓட்டுனருக்கும் நீண்ட காலமாக தகராறு இருந்து வந்துள்ளது. மோனு சிங் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர் ப்ரீத்தியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்து உள்ளார்.
ப்ரீத்தி அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டு தனது சம்பாத்தியத்தில் ஒரு குறிப்பிட்ட தக்க பகுதியை எடுத்துக்கொண்டதாக மோனோசிங் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பணம் தர மறுத்ததால் தங்களுக்கு இடையேயான உறவை மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூறி விடுவதாக கூறி ப்ரீத்தி மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அவர் அடிக்கடி பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னால் பணம் கொடுக்க முடியாததால் ப்ரீத்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ப்ரீத்தியின் வீட்டுக்குச் சென்று அவரை தனது பேருந்தில் அழைத்துச் சென்றார்.
அவர்கள் ஒரு சாலையோர உணவகத்தில் நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மோனு சிங் கூர்மையான ஆயுதத்தால் பிரீத்தியை தாக்கியுள்ளார். அவருடைய தலையை துண்டித்து உடல் அடையாளம் காணப்படுவதை தடுக்க இரண்டு கைகளையும் துண்டித்துள்ளார். பிறகு சடலத்தை வாய்க்காலில் வீசினார். அந்தப் பெண்ணின் தலை மற்றும் கைகளை காசியாபாத் பகுதிக்கு எடுத்துச் சென்று பேருந்தின் அடியில் நசுக்கி அப்புறப்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
