கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த BRG மாதேப்பள்ளியைச் சேர்ந்தவர் சென்னகேசவன் (49). இவரது வீட்டின் முன் இறந்த நிலையில் கிடந்த நண்பர் கணேசனின் சடலம் குறித்து சென்னகேசவன் போலீசில் தெரிவித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் கூலி வேலை பார்த்து வந்த கணேசன், பர்கூரில் இருந்த நண்பர் சென்னகேசவனின் வீட்டிற்கு வந்து, மூன்று நான்கு நாட்கள் தங்கி மது அருந்திவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த வாரம் வந்த கணேசன், சென்னகேசவனுடன் தங்கியுள்ளார்.
நவம்பர் 16ஆம் தேதி, இருவரும் மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிடும்போது, கணேசன் இலையில் இருந்து பிரியாணியைக் கீழே சிதறவிட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சென்னகேசவன், கணேசனின் கன்னத்தில் அறைந்துள்ளார். மது போதையில் இருந்த கணேசன் கீழே விழுந்துள்ளார். அதை நடிப்பு என்று நினைத்த சென்னகேசவன், அவரை காலால் எட்டி உதைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து கணேசன் உயிரிழந்ததை அறிந்த சென்னகேசவன், உடலைச் சோபாவில் வைத்துவிட்டு, நள்ளிரவில் வீட்டு வளாகத்திலேயே ஒன்றரை அடிக்குக் குழி தோண்டிப் புதைத்துள்ளார். மறுநாள் மாலை பெய்த கனமழையால், சடலம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளதுடன், துர்நாற்றமும் வீசியுள்ளது.
இதனால், புதன்கிழமை அதிகாலையில் அந்த உடலைத் தோண்டி எடுத்து, வீட்டு காம்பவுண்டிற்கு வெளியே போட்டுவிட்டு, எதுவும் தெரியாதது போல் காலையில் வெளியே வந்து மக்களிடமும் போலீசிலும் தகவல் தெரிவித்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கணேசன், தன் மனைவியைக் கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
