சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் (45) என்பவர், போலிப் பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரித்து, அவற்றை வங்கிகளில் அடமானம் வைத்து கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார். தமிழகத்தில் நிலம் மற்றும் ஆவணங்களின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் சென்னைப் பகுதிகளில் இவர் பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், வங்கிகள் எனப் பலர் இருக்கின்றனர். கமலக்கண்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே 13 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது புதிதாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான நிலத்தைப் போலி பத்திரங்கள் மூலம் அபகரித்து, அந்த நிலத்தை ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் கமலக்கண்ணன் முக்கியக் குற்றவாளி எனப் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதேபோல், சோழிங்கநல்லூரில் உள்ள 12,000 சதுர அடி நிலத்தைப் போலியாகப் பத்திரப் பதிவு செய்து, சென்னை எழும்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 5 கோடியைச் சுருட்டிய மற்றொரு வழக்கிலும், போலிப் பத்திரங்களைத் தயாரித்துக் கொடுத்த முக்கியக் குற்றவாளியாக இவரே இருந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
