சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில் பிரபல நகைக்கடை வைத்துள்ள இவரது குடும்பப் பின்னணியைத் தெரிந்துகொண்ட திருவொற்றியூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்ற வாலிபர், இன்ஸ்டாகிராம் மூலம் அப்பெண்ணுடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
கணவரைப் பிரிந்த ஏக்கத்தில் இருந்த அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து, பல கட்டங்களாக அவரிடமிருந்து சுமார் ரூ.1.80 கோடி மதிப்பிலான 150 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கப் பணத்தைச் சுருட்டியுள்ளார். இதனிடையே, அப்பெண்ணின் கணவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வந்தபோது, வீட்டில் இருந்த நகைகளும் பணமும் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்டா நண்பன் ஹரிகிருஷ்ணன் செய்த மாபெரும் மோசடி அம்பலமானது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாகத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சென்னை மாநகர போலிஸார், தலைமறைவாக இருந்த மோசடி மன்னன் ஹரிகிருஷ்ணனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
