மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? ராஜ்பவனுக்குச் சென்று எனது ராஜினாமா கடிதத்தை வழங்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தத் தோல்வி மக்களின் தீர்ப்பு அல்ல என்றும், திட்டமிடப்பட்ட சதி மற்றும் ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 100 தொகுதிகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதாகக் கூறிய மம்தா, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகவும், பாஜகவை விட தேர்தல் ஆணையமே தங்களுக்குப் பெரிய எதிரியாக இருந்ததாகவும் சாடினார். மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்தியப் படை வீரர்கள் குண்டர்களைப் போல நடந்துகொண்டதாகவும், சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டு முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்துத் தான் தாக்கப்பட்டதாகவும், வயிற்றிலும் முதுகிலும் எட்டி உதைக்கப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி மிகவும் வேதனையுடன் தெரிவித்தார். ஒரு பெண்ணிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தத் தோல்வி குறித்து ஆராய ஐந்து எம்பிக்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைக்க உள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
