தற்பொழுது பொதுவாகவே திரையுலகில் தற்கொலை என்பது அதிகமாகி விட்டது என்றே கூறலாம். பிரபல சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நம்மில் பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப்போல பல நடிகைகளும், நடிகர்களும் மன அழுத்தம் மற்றும் அதிக கடன் பிரச்சனையால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து வருகின்றனர். அந்த வகையில் 35 வயதான பிரபல மலையாள சீரியல் நடிகையான ரெஞ்சுஷா மேனனின் தற்கொலை திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரெஞ்சுஷா மேனன் மலையாளத்தில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் . முதலில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமான ரெஞ்சுஷா, பின்னர் சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். ‘ஸ்திரீ’, ‘நிழலாட்டம்’, ‘மகளுடே அம்மா’, ‘பாலாமணி ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் ரெஞ்சுஷா மேனன்.

அதேபோல் சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு சினிமாவிலும் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘மேரிக்குண்டொரு குஞ்சாடு’, ‘பம்பாய் மார்ச்’, ‘கார்யஸ்தான்’, ‘ஒரு வழி டிக்கெட்’, ‘அத்புத த்வீபு’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சீரியல், சினிமா என இரண்டிலும் எப்போதுமே பிஸியாகவே வலம் வந்துள்ளார்.

அவரது கணவரும் சீரியல்கள், திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ரெஞ்சுஷா மேனன். இதுகுறித்து திருவனந்தபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக தான் ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது இந்த திடீர் மரணம் தற்பொழுது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
