கேரளம், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் தெரு நாய் கடிக்குள்ளாகி, ரேபிஸ் நோய் தாக்குதல் உள்ளாகுபவர்கள் அதிகமாக இருப்பதால், தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மற்ற மாநிலங்களை விட கேரளா அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதற்காக, ஒரு புதிய வழியை கேரள அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த கண்டுபிடிப்புக்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
கேரள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தெரு நாய்களை விரட்டக்கூடிய எலக்ட்ரானிக் சர்க்யூட் பொருத்தப்பட்ட “மந்திரக்கோலை” தயாரித்து உள்ளனர். இதில் உள்ள சுவிட்ச் அழுத்தினால், அதிலிருந்து விலங்குகளுக்கு விருப்பம் இல்லாத ஒலி & ஒரு வித வாசனை வெளியாகி, லேசான அதிர்வலைகளையும் ஏற்படுத்தும். இதனால் தெருநாய்கள் அந்த மந்திர கோல் வைத்திருப்பவர்கள் அருகில் செல்லாமல், அங்கிருந்து ஓடிவிடும். இந்த மந்திர கோலில்லிருந்து வெளிப்படும் சத்தம், மனிதர்கள் காதுக்கு கேட்காது. இதை த தங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர், பிரகித் என்பவரின் மேற்பார்வையில் செய்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் அதனை வணிக ரீதியாக கொண்டு வரும் வகையில், மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரத்தை, புதுமை மாரத்தான் என்ற நிகழ்ச்சியில் பரிசளிக்கப்பட்டது. தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால், அதற்கு காப்புரிமை பெற்று தொழில் தொடங்க உள்ளதாக பள்ளி மாணவர்களும், ஆசிரியரும் தெரிவித்துள்ளனர்.
