சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு தனது பேத்தி உறவுமுறையான 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமிக்குத் தொடர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததையடுத்து இந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து குழந்தைகள் நலக்குழுவினர் நடத்திய விசாரணையில், ராஜூவின் கொடூரச் செயல் அம்பலமானது. உடனே மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜூவைக் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல் முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், ராஜூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி ராஜூவுக்கு நான்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கினார். அதன்படி, மிரட்டல் விடுத்ததற்கு ஓராண்டு, பாலியல் பலாத்காரத்திற்கு 20 ஆண்டுகள், உறவுமுறை சிறுமியிடம் தவறாக நடந்ததற்கு 20 ஆண்டுகள் மற்றும் கர்ப்பமாக்கியதற்கு 20 ஆண்டுகள் என மொத்தம் 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இந்தத் தண்டனைகளைத் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது அதிரடித் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
