மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளனர். அவாத் புராவைச் சேர்ந்த அந்தச் சிறுமி நயா பஜாரில் உள்ள ஒரு புடவைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இஷான் கான் என்பவருடன் இரண்டு ஆண்டுகளாகக் காதலில் இருந்த அவர், இஷானின் வேறு ஒரு தொடர்பு காரணமாக அண்மையில் அவரிடம் இருந்து விலகத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடானதால் ஆத்திரமடைந்த இஷான், தனது உறவினர் அர்பாஸ் கானுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியை கே.ஆர்.ஜி கல்லூரி அருகே பலேனோ காரில் கடத்திச் சென்றனர். கேன்சர் ஹில்ஸ் மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் பெண்ணிடம், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு இஷான் வற்புறுத்தியுள்ளார். அதற்குச் சிறுமி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இஷானின் தூண்டுதலின் பேரில் அர்பாஸ் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொள்ள, இஷான் தனது காதலியின் துப்பட்டாவைக் கொண்டே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் சடலத்தைப் புதர்களில் வீசிவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இஷானைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. திருமணம் செய்ய மறுத்ததே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணம் என்று சிஎஸ்பி தரம்வீர் சிங் தெரிவித்துள்ள நிலையில், கைதான இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
